குவைத் சிட்டி: குவைத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் 1,400 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட, தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் பலியாகினர். 6 இந்தியர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குவைத்தில் உயிரிழந்த இந்தியர்களின் விவரங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
கோரிக்கை
இதற்கு முன்னர் 2014 முதல் 2018ம் ஆண்டு காலகட்டத்தில், 2,932 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். 2018ல் மட்டும் 659 இந்தியர்கள் உயிரிழந்தனர். குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நடந்த தீ விபத்திலும் 40 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புகார்கள்
கோவிட் காலத்தில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில், 2022ம் ஆண்டு 71,432 பேர் குவைத் சென்றுள்ளனர். ஊதியம் தாமதம், நெருக்கடியான இடத்தில் தங்க வைப்பது உள்பட பல புகார்களை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 2021ம் ஆண்டு மார்ச் முதல் 2023ம் ஆண்டு டிசம்பர் வரை மட்டுமே குவைத்தில் உள்ள இந்திய தூதகரத்திற்கு 16 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.