இந்திய எல்லையை ஒட்டி உருவாகும் புதிய நாடு..! அரக்கான் ஆர்மியால் பதற்றத்தில் பங்களாதேஷ்!!

இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எல்லையில் உருவாகும் அரக்கான் ஆர்மியின் தனி நாடால் வங்க தேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கான் ஆர்மி மற்றும் வங்கதேசத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் அமைக்கப்பட்ட ஆங்சாங் சூகி தலைமையிலான ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு கோரியும் மியான்மரில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழு உருவானது. இந்த குழுக்கள் தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராக போராடி வருகிறது.

தொடர்ந்து ராணுவத்தை வீழ்த்தி அரக்கான் ஆர்மி உட்பட கிளர்ச்சியாளர்கள் குழு முன்னேறி வருகிறது. குறிப்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மியாமரின் பகுதிகள் அரக்கான் ஆர்மியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால் வங்கதேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கான் ஆர்மியின் கட்டுப்பாட்டில் உள்ள மியன்மாருடனான டெக்னாஃப் எல்லைப் பகுதியை வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மியான்மரின் அரக்கான் மாநிலத்தின் கணிசமான பகுதிகளை அரக்கான் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த சிக்கலான சூழ்நிலையில், வங்கதேசம், மியான்மர் ஜுண்டா அரசாங்கம் மற்றும் அரக்கான் இராணுவம் ஆகிய இரண்டுடனும் தொடர்பில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ரோஹிங்கியா அகதிகளின் சமீபத்திய வருகை குறித்து பேசிய அவர், 50,000 முதல் 60,000 வரையிலான ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தின் எல்லை பாதுகாப்பு படையினரை மீறி வங்கதேசத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் குறிப்பிட்டார். புதிதாக வந்துள்ள ரோஹிங்கியாக்களை பதிவு செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், அவர்களுக்கு பங்களாதேஷில் தங்குமிடம் வழங்குவது தொடர்பாக எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பங்களாதேஷ் எல்லைப் பகுதி, பங்களாதேஷின் எல்லைப் படையினரின் கட்டுப்பாட்டில் கீழ் இருப்பதாக உறுதி அளித்த அவர் உள்ளூர் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று வலியுறுத்தினார். ரோஹிங்கியா அகதிகளின் சட்டவிரோத ஊடுருவலுக்கு வங்கதேச தரகர்கள் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வங்கதேசத்தின் டெக்னாஃப் பகுதி போதைப்பொருள் வர்த்தகத்திற்கு பெயர் போன பகுதி என்று குறிப்பிட்ட ஜஹாங்கீர் ஆலம், நாட்டின் நீண்டகாலப் பிரச்சினையான சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் குறித்தும் பேசினார். இந்தப் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கு கூட்டு முயற்சி தேவை என்றும் இதைச் சமாளிக்க அனைவரின் ஒத்துழைப்பும் தங்களுக்குத் தேவை என்றும் கேட்டுக் கொண்டார்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து – 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?!

Next post

ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்!

You May Have Missed