E-Soil: மண்ணுக்கு கரண்ட் கொடுத்தால் செடி வேகமாக வளரும்! 

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லிங்கோப்பிங் பல்கலைக்கழகத்தில் Electronic Soil எனப்படும் மின்மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண் மூலமாக எந்த செடியாக இருந்தாலும் வேகமாக வளரும் என சொல்லப்படுகிறது. 

ஒரு தாவரத்தின் மகசூல் என்பது மண்ணின் வளத்தைப் பொருத்து அமைவதாகும். அதன் காரணமாகவே விவசாயம் செய்வதற்கு முன்பு மண்ணை ஆய்வு செய்து அந்த நிலத்தில் எதுபோன்ற பயிர்கள் விளையும் என சோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் தற்போதைய அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலமாக எந்த மண்ணில் வேண்டுமானாலும் நாம் விரும்பிய விவசாயத்தை செய்ய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 

இதில் குறிப்பாக ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் மண் இல்லா விவசாயமுறை தற்போது பிரபலமான தொழில்நுட்பமாக மாறி வருகிறது. ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீரைகள், முட்டைகோஸ், தக்காளி குங்குமப்பூ என அனைத்துமே விளைவிக்கப்படுகின்றன. இதற்கு குறைந்த இடம், குறைந்த நீர், குறைவான வேலையாட்களே போதும். அதிக மகசூலை நாம் எடுக்க முடியும். இருப்பினும், கோதுமை, பார்லி, நெல் போன்ற பயிர் வகைகளை ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த குறையை தீர்க்கும் விதமாகத்தான் E-soil கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த மண்ணை, ஹைட்ரோபோனிக்ஸ் முறைக்கு பயன்படுத்தி வேளாண் பயிர்களை சாகுபடி செய்ய முடியும். அதுவும் சாதாரணமான மண்ணில் நடவு செய்து வளரும் வேகத்தை விட, 50 சதவீதம் வேகமாக இந்த Esoil-ல் பயிர்கள் வளரும் எனக் கூறப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக் மண் மின் கடத்தும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இந்த மண்ணிற்கு குறைந்த அளவு மின்சாரத்தை செலுத்தும் போது, அது வேர் வளர்ச்சியைத் தூண்டி வேகமாக பயிர்களை வளரச் செய்வது நிருபிக்கப்பட்டுள்ளது. 

குறைந்த விளை நிலங்கள் உள்ள பகுதிகள் மற்றும் சீரின்றி இருக்கும் நிலப்பரப்புகளில் Esoil பயன்படுத்தி, ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் என இதைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தமுறை எதிர்கால விவசாயத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1 thought on “E-Soil: மண்ணுக்கு கரண்ட் கொடுத்தால் செடி வேகமாக வளரும்! ”

Leave a Comment

Exit mobile version