சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஏப்ரல் 8ம் தேதி, திங்கள்கிழமை (ரமலான் 29) அன்று மாலை ஷவ்வால் மாத பிறையைப் பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பிறையைப் பார்ப்பவர்கள் தங்கள் சாட்சியத்தை அங்கு பதிவு செய்ய அல்லது அருகிலுள்ள நகர மையத்தைத் தொடர்புகொள்வதற்கு அருகிலுள்ள நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
பொதுவாக பிறை பார்ப்பதை பொறுத்து இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். இந்த வருடம் ரமலான் மாதத்தின் 29 ம் நாள் ஏப்ரல் 8 திங்கள்கிழமை அன்று வருகிறது. அன்றைய இரவில் பிறை காணப்பட்டால், ஏப்ரல் 9 ம் தேதி செவ்வாய்க்கிழமை ஈத் அல் ஃபித்ர் பண்டிகையின் முதல் நாளாகும்.ஒருவேளை அன்று பிறை தென்படவில்லை என்றால், ஏப்ரல் 10ம் தேதி புதன்கிழமை, ஈத் அல் ஃபிதர்ரின் முதல் நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ரமலான் 30 நாட்கள் நீடிக்கும் என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.