Last Updated on: 29th June 2024, 05:50 pm
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் தப்லேஜங் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. காத்மாண்டுவிற்கு மேற்கே 250 கிமீ தொலைவில் உள்ள குல்மி மாவட்டத்தில் உள்ள மலிகா கிராமத்தில் இன்று (ஜூன் 29) ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
சியாங்ஜா மாவட்டத்தில், ஒரு பெண்ணும், அவரது மூன்று வயது மகளும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். குல்மியின் எல்லையான பாக்லுங் மாவட்டத்தில், ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் இறந்தனர். மொத்தம் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன.இந்தாண்டு பருவ மழையால் ஏற்பட்ட, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.