இந்தியாவின் முக்கிய பயண இணையத்தளம் ஒன்று மாலத்தீவுகளுக்குச் செல்வதற்கான விமானப் பதிவுகளை (ஜனவரி 8) ரத்து செய்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) எதிரான இழிவுபடுத்தும் பதிவுகள் சமூக ஊடகங்களில் இடம்பெற்ற நிலையில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையே உறவு கசப்படைந்துள்ளது.
இந்தியாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் சுற்றுப்பயணிகள் மாலத்தீவுகளுக்கு அதிக அளவில் செல்வர்.மேலும் மாலத்தீவுகளின் பொருளியலில் மூன்றில் ஒரு பங்கு சுற்றுப்பயணத்துறையைச் சார்ந்திருக்கிறது என்று உலக வங்கி கூறியுள்ளது.
மாலத்தீவுகளுக்குச் செல்வதற்கான பதிவுகள் காலவரம்பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாய் EaseMyTrip பயணத்தளம் தெரிவித்தது.சென்ற ஆண்டு (2023) நவம்பர் மாதம் திரு. முகமது முய்ஸு (Mohamed Muizzu) மாலத்தீவுகளின் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசதந்திர உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
“மாலத்தீவு அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் நபர்கள் எங்கள் நாட்டை இழிவுபடுத்தியதைக் கேள்விப்பட்டோம். எனவே சுய மரியாதை உள்ள எந்த நாடும் இதனைப் பொறுத்துக்கொள்ளாது. ஆகவே தான் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம்,” என்று EaseMyTrip நிறுவனம் Reuters செய்தி நிறுவனத்திடம் கூறியது.