பொருளாதார புலி! சிங்கப்பூர் அதிபராகும் தமிழர்.. யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்? இன்று பதவியேற்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் 9ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வான நிலையில், அவர் இன்றைய தினம் அந்நாட்டின் அதிபராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார்.

தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் குட்டி நாடு சிங்கப்பூர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே கூட 60 லட்சத்திற்குள்ளாகவே இருக்கும். மேலும், தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது.

சிங்கப்பூரின் அதிபராக இருந்த ஹலீமா யாக்கோப் நிறைவடையும் நிலையில், புதிய அதிபர் தேர்வு செய்ய கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர்.

அதிபர் தேர்தல்: இதில் மொத்தம் 27 லட்சம் பேர் வாக்களித்த நிலையில், தர்மன் சண்முகரத்னம் மகி பெரியளவில் வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் தர்மன் சண்முகரத்னமுக்கு 70.40% (1,746,427 வாக்குகள்) வாக்குகள் கிடைத்தன. மறுபுறம் அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் ஆகியோருக்கு 15.72% மற்றும் 13.88% வாக்குகள் மட்டுமே பதிவானது.

யார் இவர்: 66 வயதான தர்மன் சண்முகரத்னம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்த இவர் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆவர். மேலும், இவர் பொருளாதாரத்தில் முதுகலை ஆய்வுப் பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவரது மனைவி வழக்கறிஞர் வழக்கறிஞரான ஜேன் யுமிகோ இட்டோகி. அவர் சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவர்.

கடந்த 2001ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து இருந்து முதலில் எம்பியாக வென்ற இவர், அதன் பிறகு தொடர்ச்சியாக 2006, 2011, 2015, 2020ஆகிய ஆண்டுகளில் வென்று எம்பியாக இருந்துள்ளார். அந்நாட்டில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

அதிபராகும் முன்பு இவர் 2015- 2023 வரை சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக இருந்தவர். 2011 முதல் 2023 வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும், 2011 முதல் 2019 மே மாதம் வரை சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும் பணியாற்றியவர். மேலும், பிரதமரின் ஆலோசகராகவும் இருந்தவர். இப்படி பல பொறுப்புகளில் இருந்த அவர், அதிபர் தேர்தலில் போட்டியிட கடந்த ஜூலை மாதம், அனைத்து அரசு பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.

இன்று பதவியேற்பு: இதற்கிடையே கடந்த வாரம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் நாட்டின் 9ஆவது அதிபராக இன்று பதவியேற்கிறார். அங்கே பதவியேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times