பணவீக்கம் 30 சதவீதமாக உயர்வு: அத்தியாவசிய பொருட்களுக்கு பாகிஸ்தான் மக்கள் தவிப்பு

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அங்கு பணவீக்கம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

காய்கறிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. தக்காளி, வெங்காயம், அரிசி, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் என 54 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச செலாவணி நிதியத்திடமும், நட்பு நாடுகளிடமும் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது. கடந்த மாதம் சவூதி அரேபியா 2 பில்லியன் டாலர் (ரூ.16,400 கோடி), ஐக்கிய அரபு அமீரகம் 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) நிதி வழங்கின.

பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் டாலர் (ரூ.24,600 கோடி) நிதியுதவி வழங்க கடந்த மாதம் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் வழங்கியது. முதற்கட்டமாக 1.2 பில்லியன் டாலர் (ரூ.9,850 கோடி) நிதி வழங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி சூழல் தொடர்ந்து தீவிரமடையும் பட்சத்தில், பாகிஸ்தானில் நடுத்தர வர்க்க மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times