Last Updated on: 8th September 2023, 10:26 am
டெல்லி: ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்-க்கு ( Pedro Sanchez) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்பது சந்தேகம் என்கின்றன் ஊடக தகவல்கள்.
டெல்லியில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதற்காக டெல்லி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லியில் பல்வேறு நாட்டின் தலைவர்களுக் குவியத் தொடங்கி உள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் இன்று டெல்லி வருகை தர உள்ளனர்.
டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பங்கேற்பார் என உறுதியாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஜோ பைடன் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜோ பைடனின் இந்திய பயணம் கேள்விக்குறியானது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து ஜோ பைடன் மனைவி குணமடைந்துவிட்டார். ஜோ பைடனுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு தெரிந்தது. இதனால் ஜோ பைடன், இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு அதிபர் பெட்ரோ சான்செஸ்-க்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் பெட்ரோ சான்செஸ், டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக அந்நாட்டின் துணை அதிபர் நாடியா கால்வினோ பங்கேற்கலாம் எனவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சீனா அதிபர் ஜின்பிங், ரஷ்யா அதிபர் புதின் ஆகியோர் டெல்லி ஜி 20 உச்சிமாநாட்டுக்கு வரவில்லை. தற்போது 3-வது நாடாக ஸ்பெயின் அதிபரும் பங்கேற்க இயலாத சூழ்நிலை உருவாகி உள்ளது.