Jurong Region Line எனும் ஜூரோங் வட்டார ரயில் பாதைக்கான கட்டுமானத் தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் 7.5 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார்.மியன்மாரைச் சேர்ந்த அவருக்கு வயது 27.
சம்பவம் நேற்று முன்தினம் (4 ஜனவரி) அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 75இல் நடந்தது.ஊழியர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் (Ng Teng Fong General Hospital) கொண்டுசெல்லப்பட்டார்.அங்கு அவர் காலமானார்.சம்பவம் நடந்த இடத்தில் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் உடனடியாய் நிறுத்தப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது.அத்துடன் மனிதவள அமைச்சு நடத்தும் விசாரணையில் உதவி வருவதாகவும் அது கூறியது.
“மாண்ட ஊழியரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம். குத்தகையாளர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆதரவும் உதவியும் வழங்குவோம்,” என்று ஆணையம் கூறியது.மாண்ட ஊழியர் ஜியாங்சி கட்டுமான மேம்பாட்டு நிறுவனத்தில் (Jiangxi Construction Development) பணிபுரிந்தார்.ஜூரோங் வட்டார ரயில் பாதை 2027ஆம் ஆண்டிலிருந்து 3 கட்டங்களாகத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.