உளவு பார்க்கும் WhatsApp… அதை நம்பாதீங்க.. பகீர் கிளப்பும் எலான் மஸ்க்!

உளவு பார்க்கும் வாட்ஸ்அப்பை கண்மூடித்தனமாக நம்பினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள், ஏனெனில் வாட்ஸ்அப்பை நம்புவது உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமரசம் செய்யும் நடவடிக்கை என்கிறார் எலான் மஸ்க்

எலோன் மஸ்க் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் வாட்ஸ்அப் குறித்த அவரது கருத்து புயலை கிளப்பியுள்ளது.

வாட்ஸ்அப் தொடர்பாக மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை வாட்ஸ்அப் பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது சமூக ஊடகத்தில் அனைவரும் இந்த அறிக்கையைப் பற்றியே பேசுகிறார்கள்.

உலக அளவில் கோடிக்கணக்கானோர் அன்றாடம் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் நம்மை ஒட்டுக்கேட்கிறது என்று சொன்னால் யாருக்கு தான் அதிர்ச்சி ஏற்படாது. ட்விட்டர் இன்ஜினியர் ஒருவர் வாட்ஸ்அப் ஒட்டு கேட்கிறது என்பது குறித்து ட்வீட் செய்துள்ளார். Foad Dabiri என்ற நபர் ஒரு ட்வீட்டில், “WhatsApp பின்னணியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது. இது நான் தூங்கிக்கொண்டிருக்கும் போதும், நான் காலை 6 மணிக்கு எழுந்ததிலிருந்து இது நடக்கிறது” என பதிவிட்ட நிலையில், இந்த நபரின் ட்வீட்டுக்கு பதிலளித்த மஸ்க், “WhatsApp ஐ நம்ப முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க்கும் இதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து இந்த புகார் குறித்து விசாரிப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் உள்ள பிரச்சனை:

வாட்ஸ்அப்பிற்கான மைக்ரோஃபோன் அணுகல் இயக்கப்பட்டிருப்பதைக் காட்டும் ஆண்ட்ராய்டு டாஷ்போர்டின் ஸ்கிரீன் ஷாட்டை டபிரி பகிர்ந்துள்ளார். அதில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 4.22 மணி முதல் 4.55 மணி வரை அவரது வாட்ஸ் அப்பில் உள்ள மைக்ரோஃபோன் தானாக ON ஆகியுள்ளதை பார்க்க முடிகிறது.

இதுதான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உண்மையில், இது சாதாரண விஷயம் இல்லை என்றே தோன்றுகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கு, நிச்சயம் குறிப்பிட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கும்.

நாம் எதை பற்றி பேசுகிறோமோ, அந்த விஷயம் தொடர்பாக கூகுளிலும், ஃபேஸ்புக்கிலும் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன என்பதுதான் அது. உதாரணமாக, நாம் புதிய கார் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ரீதியில் பேசி இருந்தால், சிறிது நேரம் அல்லது நாட்கள் கழித்து ஏசி தொடர்பான விளம்பரங்கள் தானாகவே உங்கள் சமூக ஊடக கணக்குகளில் தோன்ற ஆரம்பிக்கும்.

வாட்ஸ்அப் அளித்த தகவல்:

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “சம்பந்தப்பட்ட ட்விட்டர் பொறியாளர் டாப்ரியிடம் 24 மணி நேரத்துக்கும் மேலாக பேசி வருகிறோம். அது வாட்ஸ் அப்பில் இருக்கும் பிரச்சினை இல்லை என்பது போல் தோன்றுகிறது.

அவரது ஆன்ட்ராய்டு போனில் தான் பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. எனினும், இது குறித்து விசாரித்து வருகிறோம்” என கூறியுள்ளது.மறுபுறம், கூகுள், இந்த விவகாரம் பற்றி அதிகம் கூறவில்லை, ஆனால் அது விஷயத்தை கவனித்து வருவதாக உறுதிப்படுத்தியது.

கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், “இந்தப் பிரச்சினை குறித்து நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். மேலும் வாட்ஸ்அப்புடன் இணைந்து விசாரணை செய்து வருகிறோம்” என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times