அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது அரசாங்க ரகசிய ஆவணங்களை பதவியில் இல்லாத போது கையாண்டதாக கூறி வழக்குப் பதியப்பட்டுள்ளது.
7 பிரிவுகளில் வழக்கு
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர் கைதாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்டு ட்ரம்ப் மீது அங்கீகாரம் இல்லாமல் ரகசிய ஆவணங்களை வைத்திருத்தல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் எவை என்பது தொடர்பில் பகிரங்கமாகவில்லை.மேலும், இது இரண்டாவது முறையாக ட்ரம்ப் மீது வழக்கு பதியப்படுகிறது. மட்டுமின்றி, ஒரு முன்னாள் ஜனாதிபதி மீது வரலாற்றிலேயே முதல் முறையாக பெடரல் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.
2024ல் மீண்டும் ஜனாதிபதியாக திரும்பும் பொருட்டு, டொனால்டு ட்ரம்ப் தற்போது தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் எதுவும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக இருக்காது என்றே சட்ட நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, தாம் நிரபராதி எனவும், செவ்வாய் கிழமை மதியம் புளோரிடாவின் மியாமியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனவும் ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு ஒரு இருண்ட நாள்:
முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மியாமியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.கடந்த ஆண்டு, ட்ரம்பின் புளோரிடா ரிசார்ட் மார்-ஏ-லாகோவில் சோதனை நடத்தப்பட்டு 11,000 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 100 ஆவணங்கள் அரசாங்க ரகசியம் எனவும், சில ஆவணங்கள் மிக ரகசியம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும், அமெரிக்க சட்டத்தின்படி ஜனாதிபதி உட்பட எந்த அதிகாரிகளும் அரசாங்க ரகசிய ஆவணங்களை அங்கீகரிக்கப்படாத இடத்தில் வைத்திருப்பது அல்லது பாதுகாப்பது குற்றமாக கருதப்படுகிறது.